உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Monday, October 29, 2012

Mathematicians Photos (1-30)


Sunday, September 02, 2012

இயற்கை விவசாயத்தில் பட்டதாரி இளைஞர்கள்...



விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து... பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்... பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்... ஆச்சர்யம்தானே!
சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். 'நல்ல கீரைஎன்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி,  பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்... ஜெகன்னாதன், கௌதம், ராதாகிருஷ்ணன், சலோமிஏசுதாஸ், ராமு, விசு, திருமலை, புனிதா, ஷாம், சிவகுமார், ராஜமுருகன், அறிவரசன் ஆகிய 12 பட்டதாரி இளைஞர்கள்!
திருநின்றவூர்-பெரியப்பாளையம் பிரதான சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு இந்த அமைப்பினர், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து... சென்னையில் நேரடியாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

பண்ணைக்குத் தேடிச் சென்ற நம்மிடம், முதலில் பேச ஆரம்பித்த ஜெகன்னாதன், ''கிராமப் பொருளாதாரத்தப் பத்தி அடிக்கடி நான் சிந்திப்பேன். அதோட தொடர்ச்சியா, கிராம மக்கள்கிட்ட சர்வே பண்ணினேன். 240 குடும்பங்கள்கிட்ட ஆய்வு பண்ணினதுல... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மதுபானங்கள், புகையிலைனு வருஷத்துக்கு 1 கோடியே
60
லட்ச ரூபாயைச் செலவு செய்றாங்கனு தெரிஞ்சுது.  படாதபாடுபட்டு இந்தக் குடும்பங்கள் சம்பாதிக்கற பணம்... சம்பந்தமில்லாத யாருக்கோ போறத நினைக்கறப்ப... ரொம்ப வருத்தமா இருந்துச்சு.
இந்தச் செலவைக் குறைக்கறதுக்கும், இவங்கள இதுல இருந்து மீட்டெடுக்கறதுக்கும் என்ன வழி?னு யோசிச்சப்பதான்... இயற்கை விவசாயத்தால உரம், பூச்சிக்கொல்லிச் செலவை சுத்தமா ஒளிச்சுடலாம்னு தோணுச்சு. இதுக்காகவே நம்மாழ்வார் அய்யா நடத்துன பல கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சேன். அவங்ளோட தங்கி, அவங்க செய்ற விவசாயத்தப் பாத்து, தொழில்முறையா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுகிட்டேன்.
இணைத்த இயற்கை!

அப்போ பன்னாட்டு கம்பெனியில வியாபார மேம்பாட்டாளரா நான் இருந்தேன். அங்க நண்பர்களோட பேசினதுல... நிறைய பேருக்கு இதுல ஆர்வம் இருக்கறது தெரிஞ்சது. அவங்களையெல்லாம் இணைச்சு... இந்த அமைப்பைத் தொடங்கினோம். முதல் கட்டமா, சென்னை மக்களுக்கு ரசாயனம் தெளிக்காத கீரையை உற்பத்தி செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்காக, இந்த 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரை சாகுபடியைத் தொடங்கியிருக்கோம். விளையற கீரையை சென்னையில வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம்.
மொத்தமிருக்கற 12 உறுப்பினர்கள்ல... நாலு பேர் முழுநேரமா செயல்படுறோம். இதுக்காகவே... ஏற்கெனவே நாங்க பார்த்திட்டிருந்த வேலையை விட்டுட்டோம் (ஜெகந்நாத், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் மருத்துவ நிறுவன அதிகாரிகளாகவும்... கௌதம், மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவன நிதி ஆலோசகராகவும், சலோமி ஏசுதாஸ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் டெக்கான் டெவலப்மென்ட் சொஸைட்டி தொண்டு நிறுவன திட்ட அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்). மத்த உறுப்பினர்கள்.. வாரம் ஒரு முறை வருவாங்க. மாசம் ஒரு முறை கூட்டம் நடத்துவோம். அவங்கவங்க ஆலோசனைகளைப் பரிமாறிக்குவோம்.
இயற்கை உரத் தேவைக்காகவே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். இப்போதைக்கு எட்டு மாடுகள் இருக்குது. இயற்கை முறையில விளைஞ்ச பொருட்களை விக்கிறதுக்காக... 'நல்ல சந்தைனு ஒரு அமைப்பையும் தொடங்கப் போறோம். இயற்கை விவசாயிகள், அத்தனைப் பேருமே பயன்படுற வகையில லாபநோக்கம் இல்லாம இதை நடத்தப் போறோம்'' என்றார் ஜெகன்னாதன்!

''
கீரையில சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தாகூட... பூச்சிக் கீரைனு சொல்லி வாங்க மாட்டேங்கறாங்க சிலர். இயற்கை முறையில விளைவிக்கறப்ப... சில நேரங்கள்ல கீரைகள்  இப்படித்தான் இருக்கும். அதோட, பூச்சிகள் சாப்பிடற கீரைகளை சாப்பிடறதால எந்த பாதிப்பும் இல்லைங்கறதுதான் உண்மை. பூச்சிங்க சாப்பிட்டிருந்தா... அது இயற்கையில விளைஞ்ச கீரைனு நம்பி வாங்கலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கற வயல்கள்ல இருந்து வர்ற கீரைகள்தான், பெரும்பாலும் ஓட்டைஇல்லாத கீரையா இருக்கும்.
பொதுவா... காய்கறி, கீரை, பழம்னு எல்லாத்துக்குமே சீசன் இருக்கு. அந்தந்த சீஸன்லதான்... அதெல்லாம் நல்லா விளையும். அப்படிப்பட்ட காய்கறிகளை, இயற்கை முறையில எளிதா விளையவெக்க முடியும். ஒவ்வொரு சீஸன்லயும், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ªன்ன தேவைப்படும்னு இயற்கையே செய்திருக்கற ஏற்பாடுதான் இது. அதனால, அந்தந்த சீஸன்ல விளையறதை மட்டும் வாங்கிச் சாப்பிடறதுதான் நல்லது. இந்த உண்மை புரியாம, பலரும் சீஸன் இல்லாத சமயங்கள்லகூட அந்தக் காய்கள்தான் வேணும்னு வற்புறுத்திக் கேக்கறாங்க'' என்று தங்களது சிக்கலைச் சொன்னார், முழுநேர ஊழியர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணன்.

விதவிதமா இருக்குது, கீரை!
''
முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, சுக்கான், சக்கரவர்த்தினி, பசலைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, சிகப்புப் பொன்னாங்கன்னி, கோங்கூரானு சொல்லற சீமைக் காசினி, கொம்புக் காசினி, அகத்தி, முருங்கை, வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், வெந்தயக் கீரை, கல் இளக்கி, காசினி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, தவசிக் கீரை, சிலோன் கீரை, திருநீற்றுக் கீரை... இப்படி முப்பதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை சாகுபடி செய்றோம்'' என்று பட்டியலிட்ட முழு நேர ஊழியர் கௌதம், கீரை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பாடம் சொன்னார்.
நிறைவாகப் பேசிய கௌதம், '' ஒரு பாத்தி அமைக்க, 200 ரூபாய் செலவாகும். முதல் கட்டமா, நாங்க மொத்தம் 50 சென்ட் நிலத்துல 300 பாத்திகள அமைச்சுருக்கோம். இதை ஒரு முறை அமைச்சா... மூணு, நாலு தடவை சாகுபடி பண்ணலாம். ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டு கீரை பறிக்க முடியும். ஒரு கட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். பாத்திகளோட இடைவெளியில அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப் போட்டிருக்கோம். வேலைக்கு 2 பேர் இருந்தா போதும். 300 பாத்தியிலிருந்தும் மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபா வரை வருமானம் கிடைச்சுட்டுருக்கு.

ஒரு பானை சோத்துக்கு, ஒரு சோறு பதம் போல, 50 சென்ட் நிலத்துல பல விஷயங்களைக் கத்துக்கிட்டோம். இந்த அனுபவத்தை வெச்சே... கீரை சாகுபடியை விரிவுப்படுத்தப் போறோம். அதேபோல, வேறு சில பயிர்களையும் கையில எடுக்கப் போறோம். இதன் மூலமா மொத்தமா இருக்கற
5
ஏக்கர்ல இருந்தும், ஒவ்வொரு மாசமுமே... பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். முறையா திட்டம் போட்டு உழைச்சா, விவசாயமும், மத்த தொழில் மாதிரி லாபம் கொட்டும். ஏற்கெனவே நாங்க பார்த்துட்டிருந்த வேலையில கிடைச்ச சம்பளத்தைவிட, இன்னும் கூடுதலா விவசாயத்தின் மூலமே லாபம் பார்க்க முடியும்கிறத நிரூபிச்சே தீருவோம்'' என்று சூளுரைத்து விடை கொடுத்தார்.

 
தொடர்புக்கு,
ஜெகன்னாதன், செல்போன்: 99626-11767
கௌதம், செல்போன்: 98406-14128
ராதாகிருஷ்ணன், செல்போன்: 97898-40630

Tuesday, August 14, 2012

ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்

தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது.  இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன.  இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று - முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள்  இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன. 


இத் தளங்களைக் காலக்கணக்கிடுவது (dating) இன்னமும் முடிவாகவில்லை ஏனென்றால் இந்த ஆகழாய்வில் இருந்து எந்த புலப்பாட்டுச் சான்றும் கிட்டவில்லை. இருந்தபோதிலும், ஒரு சில தளங்கள் கரியம் 14 (C 14)  காலக்கணக்கீடு காட்டி உள்ளன. அவை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் சான்றளிப்பது போல் 1,600 BCE க்கும் முற்பட்டதாக இல்லை என முடிவு கட்டி உள்ளன.  அகழாய்வு செய்யப்பட்ட இரும்புக் காலத் தளங்களிலேயே ஆதிச்சநல்லூர் ஆகழாய்வுகள் சிறப்பு கவனத்தைப் பெறத் தக்கனவாக உள்ளன. அதுவே தமிழகத்தில் அண்மைக் காலம் வரையில் அகழாய்ந்த தளங்களிலேயே மிகப் பழமையானது. அண்மைக் கால அகழாய்வின் முடிவு, தமிழ் நாட்டில் தமிழ் நாகரிகத்தின் பழமை, வளர்ச்சி ஆகியவற்றின் மீது ஒரு மீவலிய விளைவை பெற்றிருந்தது. 


தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் சுற்றுப் பகுதிகள் கற்கால ஊழியில் தொல்பழமையான இடத்தைப் பெற்றிருந்தன. சிறப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் சுற்றுப் பகுதிகள் நுண்கற்காலத்து மாந்தர் வாழிடங்களின் சான்றெச்சங்களைக் (vestiges) கொண்டுள்ளன. அங்கு நுண்கல் வகை சார்ந்த கற்கருவிகளை உள்ளிணைத்த மணற்குன்றுகள் உள்ளன. அக் கற்கருவிகள் செம்பட்டைக் கல் (Jasper), படிமக்கல் (agate), சூதுபவழம் (Carnellian), படிகக்கல் (crystal) மற்றும் கல்மம் (quartz) ஆகிய குறைமணிக் (Semi precious) கற்களால் ஆனவை. இவ்வகை கற்கருவிகள் இப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. அவை சற்றொப்ப 12,000 முதல் 10,000 B.C.E. காலத்தன எனக் காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவே நம் முந்து - வரலாற்று மூதாதைகள், சிறப்பாக, திராவிடர்கள் பிந்து அரப்பா நாகரிகக் கால பண்பாட்டுடன் ஒப்பிடத்தக்க பண்பாட்டுத் தனிகூறுகளைக் கொண்டிருந்த இடம். அரப்பா நாகரிகப் பண்பாட்டின் வீழ்ச்சி தமிழ் நிலத்தின் தென்கோடியில் அமைந்த ஆதிச்சநல்லூரின் திராவிட நாகரிகப் பண்பாட்டின் எழுச்சியோடு ஒன்றிப்பதாகத் (coincide) தோன்றுகின்றது.  


இங்ஙனமாக, ஆதிச்சநல்லூர் தமிழ் நிலத்துத் தொடக்க வரலாற்று வரைபடத்தில் முந்து தலைமை நிலையைப் பெறுகின்றது. அண்மையில் ஆதிச்சநல்லூரில் 2004 - ஆம் ஆண்டு மற்றும் அதைத் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் செய்திப் பத்திகளில் இடம் கொண்டன, அதோடு அரசின் கவனத்தையும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்தன. தொல்லியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தமட்டில் ஆதிச்சநல்லூர் ஒரு தொடரல்லாத தடைநிலை (checkered) வரலாறு உடையது.  


இனி, ஆதிச்சநல்லூர்த் தொல்லியல் அகழாய்வு வரலாற்றையும் அவற்றின் வரலாற்று முதன்மையையும் ஆய்வோம். ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து  24 அயிர் மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவில் தென்கிழக்கு திசையில் இடம் கொண்டுள்ளது. இவ்வூர் திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அதற்கும் மேல் இதன் மேற்குப்புறத்தில் அமைந்த தாமிரபரணி ஆற்றுக் கரையில் இடம் கொண்டுள்ளது. இங்கு பேர் எண்ணிக்கையிலான  புதைகலன்கள் (முதுமக்கள் தாழிகள்) கண்டறியப்பட்டன. அங்கு முற்காலத்தே வாழ்ந்த மக்களுடையது எனும் பொருளில் இதனைத் தாழிக்காடு என்கின்றனர்.


தொல்லியல் அகழாய்வுகள் இந்தப் புதை தளத்தில் 1876, 1899, 1903, 1904 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டு உள்ளன.   பின்னர் 1914 ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் இங்கு தொல்லியல் அகழாய்வுகளை நிகழ்த்தினர். அண்மைக் காலத்தில், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் (ASI) துறை இத்தளத்தில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை நடத்தியது.


1914 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகள் 9,000 க்கு அதிகமான தொல்பொருள்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.  அவற்றுள் தாழியிற் புதைத்தல் தொடர்பான மட்கலன்கள், பொன்னாலான பொருள்கள், செம்பு வடிவங்கள், முருகப் பெருமானின் மூன்று முனை வேல், தாய்த் தெய்வத்தின் மட்கல வடிவங்கள், தொங்கும் விளக்குகள், முதலாயவை அடங்கும். இங்கத்து மட்கலத் தொழிலில் கருப்புநிற மட்கலன், சிவப்புநிற மட்கலன், தென்னிந்திய இரும்புக் கால நாகரிகத்தின் தனிக்கூறான கருப்பு - சிவப்பு நிற மட்கலன் ஆகிய வகைகள் அடங்கும். 


அண்மைய (2004 மற்றும் 2005) அகழாய்வுகள் 150 க்கும் மேற்பட்ட புதைத்தல் கலன்களையும், கருப்பு - சிவப்பு நிற மற்றும் கருப்புநிற மட்கலன்களையும், செப்பு வளையல்கள், செம்புக் கோடாரிகள், இரும்பு வேல்கள் இவை தவிர, புதியகற்கால கற்கருவிகள் ஆகியனவற்றையும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தன. சிறு அளவு நெல் உமியும், அரிசியும் தவசங்களும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. இங்கு கிடைத்த பானைஓடுகள் எழிலூட்டும் வேலைப்பாடுகளையும், கீரல்குறிகளையும் இவை தவிர, மூல தமிழ் எழுத்துகளையும் பெற்றிருந்தன. 


பேரெண்ணிக்கையில் வெண்கலத்தால் ஆன பொருள்களும்  புலி, எருமை, வெள்ளாடு, மான், சேவல் முதலாயவற்றை ஒத்த வடிவுகளும் முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்டன.


மேற்சொன்ன பழம்பொருள், செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகத்தைப் பின்தொடர்ந்து  வெண்கல மற்றும் செம்பு ஊழிகள் (ages) நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது. 


இத்தளத்தின் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு, அகழாய்வாளர் திரு. தியாக. சத்தியமூர்த்தியால் 1570 BCE  என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தளமே காலத்தால் பழமையானது அதோடு, புதியகற்காலம், நுண்கற்காலம், இரும்புக் காலம், செம்பு - வெண்கலக் காலம் தவிர, இரும்புக் கால நாகரிகங்களின் சான்றெச்சங்களையும் உடையதாக நாம் அறியும் தளமும் இது ஒன்றே ஆகும். அதைமுன்னிட்டு, ஆதிச்சநல்லூர் மக்கள் எல்லா மாழைகளையும் (Metals) பயன்கொண்டனர், அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து இருந்தனர். இங்கு திரட்டிய மாழைப் (Metal) பொருள்கள், ஆதிச்சநல்லூர் விறுவிறுப்பான உள்நாட்டு வணிக நடுவமாகவும், நகரமாகவும் திகழ்ந்தது என்பதைச் சுட்டுகின்றன.


இத்தளத்தில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மட்கலத் தாழிகள், ஆதிச்சநல்லூர் மக்கள் நிரம்பிய நகரமாகவும், நாடறிந்த நகரமாகவும் செழிப்புற்று விளங்கியது என்ற உண்மையைப் புள்ளியிட்டு குறிப்பிடுகின்றது. கருப்பு - சிவப்புநிற மட்கலன்களுடன் கூடிய பழந் தமிழ் எழுத்துப் பொறிப்போடு உள்ள பானைஓடுகள் பிந்து அரப்பா நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒருமைப் பண்பு உடையன என்பதைச் சுட்டுகின்றன. இவற்றில் பிந்து அரப்பா தளங்களில் காணப்படும் கீரல்குறிகளை அதிகம் ஒத்த கீரல்குறிகளைக் கொண்ட பானைஓடுகளும் உள்ளன. 


ஆதலால், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் நடு இந்தியாவில் காணப்படுவது போன்றே புதிய கற்காலத்தைப் பின்தொடர்ந்து வெண்கல - செம்புக் காலம் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தி உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்து அரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்புடையன என்பதை நிறுவி உள்ளன. 


இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இஃது அரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது.


இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் 
பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை
சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). 

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி


பார்வை நூல்; கல்வெட்டு இதழ், ஏப்ரல் 2009.